Monday, 25 July 2011


வலி நிறைந்த வழிதனைக்
கடந்து வந்துள்ளேன்
கடக்கும் தூரம் என் முன் நீள்கிறது

கடந்த பாதையை உற்று நோக்கின்
மேடு பள்ளங்கள்
என் முகத்தின் சாடையை
ஒத்திருக்கின்றன

பயணத்தின் நடுவே
கண்ணில் தெரியும் மரங்கள்
எதுவும் மரங்களாய் இல்லை
என்னுடன் வாழ்ந்து
என்னுள் மரித்துப் போன நீயாய்
நிற்கின்றன

வாழ்வின் ஆரம்பப் புள்ளியில்
நிற்பதாய் நினைத்திருந்தேன்
பல நேரங்களில்
முடியும் நேரம் என் வீட்டு கடிகாரத்தில்
என்னை விட வேகமாய் ஓடுகின்றது

முகமெங்கும் ஒவ்வொரு நாளும்
சுருக்கங்கள் பாவத்தின் எண்ணிக்கையாய்

சோர்வின் அழுத்தம்
முதுகில் அழுக்காய்
எட்டாத தூரத்தில் உறுத்துகிறது

மறந்து போகும் நிழலாய்
திடீரென என் முன் நீள்கின்றன
கனவுகள்

இரவுகள் மிகுந்த அச்சத்துக்கிடையில்
கழிகின்றன
முகம் போர்த்தும் போர்வை
இறுதி நெருப்பாய் கொதிக்கிறது

எனை நானே சுமக்கும்
பாடையாய் மாலை சூடி
ஊரெங்கும் ஊர்வலம் போகிறேன்

விடியும் ஒவ்வொரு காலையும்
போக்கியாக வேண்டிய
இன்றைய மணித்துளிகளை
கனமாய் ஏந்தி காத்திருக்கிறது ....!!!

No comments:

Post a Comment