Monday, 25 July 2011


நிகழ் காலங்கள் நிஜம்
போலத் திரிகின்றன
கடந்து வந்தவை காணாமல்
போய் விட்டதாய்
ஒரு உணர்வு

இன்றிருப்பது மட்டுமே இன்றாகிப் போகிறது

ஏதோ ஒரு காட்டுக்குள்
கட்டவிழ்ந்து கிடக்கிறேன்
பயணங்களின் முடிவு தேடி
நடந்து கொண்டே இருக்கிறது நேரம்

உடன் நடக்கும் பாதச் சுவடு
மறந்து பாதை மாறி நடக்கிறேன்
எங்கோ சிதறும் ஒரு துளி நீரின்
சத்தத்துக்காக

ஒவ்வொரு நாளும் புதிதாய்ப்
பிறக்கிறேன்
மறுபடி ஒரு பயணத்துக்காக

நீர்த்துப் போன வாழ்வில்
சாரல் அடித்து
வெடித்துத் திறக்கிறது
என் பாலை

வெளியெங்கும் விரவிக் கிடக்கிறது
எப்போதோ சிந்திப் போன
புணர்ச்சியின் மிச்சங்கள்

அணைத்துப் போன தடங்கள்
தடுமாற்றத்துடன்
நிகழ்ந்ததைச் சொல்கிறது
என் இரவுக் கதைகளில்

தொடங்கும் இடம் தேடி
அலைகிறது மறந்து போன
காதலின் எச்சங்களை
மனம்

ஏன் வந்ததென்று தெரியாமல்
வந்து விட்டு போகிறது
ஒவ்வொரு இரவுகளிலும்
நேற்றின் ஆழ் முத்தங்கள்

நீளும் பயணம்
நீண்டு கொண்டே இருக்கிறது
மேலும் மேலும்
இன்னும் இன்னும்

மறுபடி ஒரு பயணத்துக்காய்

No comments:

Post a Comment