Saturday, 17 December 2011

படிந்த வரி.......!!!

இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்

- கல்யாண்ஜி


மிகச் சிக்கலான பல பிரச்சினைகளுக்கு மிக எளிதாகவே தீர்வுகள் அமைந்துவிடுகின்றன. இவ்வுண்மையினை உணர்த்தத்தான் அவ்வப்போது பெரிய பிரச்சினைகள் வந்து போகின்றனவோ என்னவோ? 'செத்துப் போய்விடலாம் போலிருக்கிறது. இதிலிருந்து நான் எப்படி மீண்டு வரப்போகிறேன்' என்று புலம்பித் தவித்த எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். அவர்களில் யாரும் இதுவரை இறந்ததாய்த் தகவலில்லை.

காலத்தின் காற்றோட்டம் நம்மை எங்கெங்கோ அடித்துச் செல்கிறது; எதெதையோ அடித்துவந்து நம்மிடம் சேர்ப்பிக்கிறது; எதெதையோ பிரித்தும் கொண்டு சென்றுவிடுகிறது. எல்லா நிகழ்விலும் மீதமிருப்பவை நம்மீது அழுந்தப் பதிகிற அனுபவ முத்திரைகள்தான்.

அனுபவங்கள் மனிதனை இழைக்கின்றன; அனுபவங்கள் மனிதனாகின்றன; அனுபவங்களே மனிதனாய் அலைவதாக உணர்வது அலாதியானது.

ஒவ்வொரு மரணத்திலும் எண்ணிக்கை மறந்த அனுபவங்கள் அழிந்து போகின்றன. மரணத்துக்கு முன்னதான அனுபவங்களின் அளவிலேயே மதிப்படைகிறது ஒவ்வொரு மரணமும். மரணம் கூட ஒருவகையில் அனுபவம்தானோ?

No comments:

Post a Comment